ஊர்ப்புதினம்

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து சிறப்பு அறிக்கை!

1 week 6 days ago

Published By: VISHNU 28 MAR, 2025 | 07:08 PM

image

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வானிலை ஆய்வுத் துறை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய நிலையை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறுகிறது.

அதன்படி, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் குறித்து மக்கள் கவனமாக இருக்கவும், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், வெளிர், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் குறித்த திணைக்களம் அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/210493

பட்டலந்தை அறிக்கை பற்றி பேசுபவர்கள் வடக்கு வதைமுகாம்கள் பற்றி விசாரிக்க தயாரில்லை - சத்தியலிங்கம்

1 week 6 days ago

28 MAR, 2025 | 06:16 PM

image

பட்டலந்த அறிக்கை பற்றி பேசுபவர்கள், பல வதைமுகாம்கள் வடக்கில் இயங்கின; இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர்; அதை விசாரிக்க இந்த அரசாங்கமும் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றங்களில் சிறப்பாக செயற்பட்டால் அதன் பின்னர் வரும் மாகாண சபைத் தேர்தல், 5 வருடங்களுக்கு பின்வரும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றில் சிறப்பான  வெற்றியை பெற முடியும்.

முல்லைத்தீவில் பாரம்பரிய வைத்தியம் படித்தவர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் கடந்த 7 வருடங்களாக வேலை கிடைக்காமையால் பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றுகிறார்கள். பிரதேச சபைகள் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும். அதற்கு ஏற்பட்ட சட்டங்களை வகுத்து சித்த மருத்துவ நிலையங்களை உருவாக்க முடியும். அதில் அவர்களை வைத்தியர்களாக நியமிக்க முடியும்.

கட்சியை பலப்படுத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் அவசியம். அத்துடன் மக்களுக்கு சேவை வழங்க அவை முக்கியமானவை. தேர்தல் நேரம் பலர் வருவார்கள். ஆனால், கடந்த 75 வருடங்களாக தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக தியாகங்களை செய்த தாய் கட்சி ஆகிய தமிழ் அரசுக் கட்சி சீசனுக்கு வரும் பறவைகள் அல்ல. நாம் மக்களுடனேயே இருக்கின்றோம்.

வவுனியா வடக்கு பிரதேசத்திற்கு நீர் வரவில்லை. ஆனால் மகாவலி எல் வலயம் ஊடாக பல குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் திட்டமிட்ட இனப் பரம்பலை மாற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.

அதேபோன்று, செட்டிக்குளம் பிரதேசத்தின் கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் மூலம்  ஆபத்தான நிலையில் உள்ளது. புதிதாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள். திட்டங்களை நேர்மையாக மக்களுக்கு செயற்படுத்தினால் நல்லது. ஆனால், இவ்வாறான திட்டங்களின் பின்னால் குடியேற்றங்கள் உள்ளன. இதனை கடந்த கால அரசாங்கங்கள் செய்தன. தற்போதைய அரசாங்கமும் அதனையே செய்கிறது.

வடக்கு - கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை கூற, ஏற்றுக்கொள்ள இந்த அரசாங்கமும் தயாரில்லை. அண்மையில் 4 பேரை பிரித்தானியா தடை செய்தது. அதனை எமது கட்சியும் வரவேற்றுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு ஆதாரங்களுடன் இருந்த பலரில் 4 பேரை பிரித்தானியா தடை செய்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தினர் அந்த ஒருதலைப்பட்சமான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்கள். பட்டலந்த அறிக்கை பற்றி பேசும் அவர்கள், பல வதைமுகாம்கள் வடக்கில் இயங்கின. இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர்.  அதை விசாரிக்க தயாரில்லை. அதைப் பற்றி பேச அவர்கள் தயாரில்லை.

கடந்த கால அரசாங்கங்கள் என்ன பதிலை சொன்னார்களோ அதே  பதிலை தான் இவர்களும் சொல்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை வழங்கியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் நாட்டை எடுத்துள்ளார்கள். அவர்கள் உடனடியாக மாயாஜாலம் செய்ய முடியாது. அவர்கள் பொருளாதார ரீதியாக நாட்டை மீட்டு எமது அரசியல் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதற்கு நாம் கால அவகாசம் வழங்கியுள்ளோம். அதனை அவர்கள் பயன்படுத்தி விரைவாக செய்ய வேண்டும். அது நடக்காவிடின் இந்த அரசாங்கத்தையும் நாம் எதிர்ப்போம். அதற்கான காலத்தை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/210485

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையை குறைப்பது தொடர்பில் அறிவிப்பு!

1 week 6 days ago

Published By: DIGITAL DESK 2 28 MAR, 2025 | 04:48 PM

image

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடையைக் குறைக்குமாறு பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சில பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவின் பணிப்பாளர் கங்கா தில்ஹானி இது தொடர்பில் தெரிவிக்கையில், 

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கை மூலம் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனை யும் மீறி சில பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் அதிகளவான புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரம் பாடசாலைகளுக்கு கண்காணிப்புக் குழுக்களை அனுப்பி புத்தகப் பைகளின் எடை தொடர்பில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி,  பாடசாலை மாணவர்களின் புத்தகப் பையின் எடை பதினைந்து முதல் இருபது கிலோ அல்லது அதற்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.

அதன்படி, முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை இரண்டு கிலோவாகவும்,இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை மூன்று கிலோவாகவும், ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை நான்கு கிலோவாகவும் இருத்தல் வேண்டும்.

பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனின் புத்தகப் பையின் எடை ஏழு கிலோவாக இருத்தல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/210460

தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய கோரியவர் கெஹலிய

1 week 6 days ago

image_75a0264c9d.jpg

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்லவின் ஆலோசனையின் பேரில், தரமற்ற மருந்துகளை வழங்குவதற்காக இந்திய மருந்து நிறுவனத்தின் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் முன் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் விசாரணைக்காக ஆஃப் கமிட்டியின் முன் அழைக்கப்பட்டபோது இந்த தகவல் தெரியவந்தது.

அந்த மருந்துகளுக்கு செவெரிட் நிறுவனத்தைச் சேர்க்க செயலாளர் அறிவுறுத்தியதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல செயலாளருக்கு அறிவுறுத்தியதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் சப்ளையர்  தொடர்பில் ஒரு முன்மொழிவை முன்வைத்ததாக தெரிவித்தார்.

151 மருந்துகளும் 5278 அறுவை சிகிச்சை கருவிகளும் பற்றாக்குறையாக இருப்பதாக தகவல் உள்ளதா? என்று கோப் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர கேள்வி எழுப்பினார்.


Tamilmirror Online || தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய கோரியவர் கெஹலிய

யோகட் சாப்பிட பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி ?

1 week 6 days ago

28 Mar, 2025 | 03:58 PM

image

யோகட் சாப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் ஹேமஜீவ கோட்டாபய தெரிவித்தார்.

மில்கோ நிறுவனத்தின் எதிர்கால திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யோகட்டுடன் வழங்கப்படும்  கார்ட் போர்டு கரண்டிகளை குழந்தைகள் அதிக நேரம் வாயில் வைத்திருப்பதால் அந்த கரண்டி சிறிது நேரத்தில் உருகி விடுகிறது. அத்துடன் இந்த கார்ட் போர்டு கரண்டிகள் குறித்து வாடிக்கையாளர்கள் பல்வேறு  முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.

இவற்றை கருத்தில் கொண்டு யோகட்டுடன் மரக்கரண்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நாட்டில் இந்த மரக்கரண்டிகள் போதிய அளவு உற்பத்தி செய்யப்படாமையால், அவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

யோகட் சாப்பிட பயன்படுத்தப்படும் மரக்கரண்டிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி ? | Virakesari.lk

துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான்

1 week 6 days ago

28 Mar, 2025 | 05:50 PM

image

பிறப்பாலும் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களுடைய கைகளிலேயே துப்பாக்கிகள் திணிக்கப்பட்டன. அதற்கான காரணக் கதைகளைக் கூறாமல், எம்மை திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திரமாக சித்திரிப்பதற்கு முனைகின்றார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வு கிரான் ரெஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஒரு உறுதியான அமைப்பாக கிழக்கு மாகாண அரசியல் சமூக பொருளாதார மேம்பாட்டின் ஆரம்பமாக மிளிர வேண்டும் என்று ஒரு நல்ல சிந்தனையோடு நாங்கள் கூடியிருக்கின்றோம். 

உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றி என்பது உள்ளூர் தலைவர்களை உருவாக்குவதற்கான வெற்றியாகும். உள்ளூர் அதிகார சபைக்காக போட்டியிடுபவர்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். 

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியிலேயே அமைந்திருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மிகவும் கவனமாக செயற்படவேண்டியுள்ளது.

கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூவ் ஹக்கீம் இந்த மண்ணிலே சுமார் 40,000 ஏக்கரை பரிபாலனம் செய்வதற்காக கேட்கின்றார். 

ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் 70,000 ஏக்கரை நிர்வகிக்க வேண்டும் எனக் கேட்கின்றார். இவ்வாறுதான் பிரச்சினைகள் இருந்துகொண்டிருக்கின்றன.

அதிகம் பேர் ஏன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், கருணா அம்மானும் மீண்டும் சேர முடியாது எனக் கேட்டார்கள். அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்திருந்தோம். அது இப்போது சாத்தியமாகி இருக்கின்றது.

காலம் தாழ்த்திய முடிவாக இருந்தாலும் சாலப் பொருத்தமான முடிவு எனப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். அதற்காக உழைத்தவர்தான் முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன்.

கருணா அம்மானை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்திருப்பதானது எம்முடைய தோல்வி அல்ல, அது இந்த அரசாங்கத்தினுடைய இராஜதந்திர தோல்வியாகத்தான் என்னால் பார்க்க முடியும். 

அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தினுடைய தலைவிதியை மாற்ற வேண்டிய, கிழக்கு மாகாண மக்களை தூக்கி நிறுத்தவேண்டிய விடயங்கள் எல்லாம் எங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டு இருக்கின்ற விடயங்களாக உள்ளன.

கருணா அம்மானோ அல்லது ஜூலை கலவரமோ எல்லாவற்றுக்கும் அடித்தளமிட்டவர்கள் யார்?

1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை தேடி கற்றுக்கொள்ளுங்கள். 

விடப்பட்ட சொல்லாடல்களும் கருத்தாடல்களும்தான் அன்று எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தை தலைவர் ஆக்கியது. அவர்கள் பற்ற வைத்த நெருப்பு பெரும் தீப்பொறியாக பல இயக்க தலைவர்களை உருவாக்கி திட்டங்களையும் துவக்குகளையும் ஏந்துகின்ற நிலையை எங்களுடைய காலடிக்கு கொண்டு வந்தது என்றார்.

துப்பாக்கிகள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டன - பிள்ளையான் | Virakesari.lk

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு புதிய நண்பர்கள்

1 week 6 days ago

28 Mar, 2025 | 05:17 PM

image

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கீரிப்பூனை ஜோடி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வன விலங்குகள் சில கொண்டுவரப்பட்டன.

இந்த வன விலங்குகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர்களால் சுமார் ஒரு மாத காலமாக பரிசோதனைக்குட்படுத்தட்ட நிலையில் அவற்றில் இருந்த கீரிப்பூனை ஜோடி ஒன்று தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

2 முதல் 6 வயது மதிக்கத்தக்க கீரிப்பூனை ஜோடி ஒன்றே இவ்வாறு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Meerkat எனப்படும் இந்த கீரிப்பூனைகள் 15 வருடங்கள் உயிர் வாழும் என கூறப்படுகின்றது.

இந்த கீரிப்பூனைகள் தென் ஆபிரிக்கா, போட்ஸ்வானா, நமீபியா ஆகிய நாடுகளில் பெரும்பாலும் காணப்படும். 

gtyj.jpg


தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு புதிய நண்பர்கள் | Virakesari.lk

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1 week 6 days ago

28 Mar, 2025 | 05:30 PM

image

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 111,982 ஆகும்.

மேலும், ரஷ்யாவிலிருந்து 90,255 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 64,711 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 48,129 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 37,268 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 41,449 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 25,513 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk

மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி; அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து!

2 weeks ago

New-Project-386.jpg?resize=750%2C375&ssl

மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி; அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து!

மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை வெளியிட்ட பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக்ஷ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதமும் விதித்தார்.

பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டார்.

இதன்போது, மதுவின் வாசனை அவர் மீது தொடர்ந்து இருந்ததால், பொலிஸார் அவரை மேலும் விசாரித்தனர், அப்போது அவர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததான வாதத்தின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதிவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்தார்.

https://athavannews.com/2025/1426762

இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் – IMF

2 weeks ago

New-Project-383.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் – IMF

இலங்கையின் பொருளாதார மீட்சி வேகம் பெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் (‍IMF) தெரிவித்துள்ளது.

இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாகக் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, IMF நிர்வாகக் குழு இலங்கைக்கான EFF (விரிவாக்கப்பட்ட நிதி வசதி) ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்தது.

மேலும் இது நாட்டிற்கு உடனடியாக $334 மில்லியன் ஆதரவை அணுக அனுமதித்தது.

எனவே, அந்த மூன்றாவது மதிப்பாய்வை வாரியம் அங்கீகரித்தவுடன், $334 மில்லியன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிக்கக் கிடைத்தது.

மேலும் இந்த $334 மில்லியனுடன், இது IMF இலிருந்து இலங்கைக்கு மொத்த நிதி உதவியை $1.34 பில்லியனாகக் கொண்டு வருகிறது.

இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.

பொருளாதார மீட்சி வேகம் அதிகரித்து வருகிறது, இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது, நிதிப் பக்கத்தில் வருவாய் வசூல் மேம்பட்டு வருகிறது, சர்வதேச இருப்புக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டியது, அது இரண்டு வருட பொருளாதார சுருக்கத்திற்குப் பிறகு. மேலும் 2025 ஆம் ஆண்டிலும் இலங்கையில் மீட்சி தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இவை அனைத்தும் இலங்கைக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் சாதகமான முன்னேற்றங்கள்.

எனினும், இவை அனைத்தும் கூறப்பட்டாலும், பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது.

எனவே பெரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு சீர்திருத்த உந்துதல் நிலைத்திருப்பது மிகவும் முக்கியமானது – என்றார்.

https://athavannews.com/2025/1426750

37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு!

2 weeks ago

images-1-7.jpg?resize=283%2C178&ssl=1

37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

அதன்படி தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, லலித் பத்திநாயக்க சஞ்சீவ மெதவத்த, ரன்மல் கொடிகுணு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிறி ஜெயலத் மற்றும் எம்.ஜி.ஆர் எஸ். தமிந்த ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

மேலும் அடுத்து நியமிக்கப்படவுள்ளவர் இந்த நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபர் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்குவார். அத்துடன் நியமிக்கப்படும் அடுத்த பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

https://athavannews.com/2025/1426722

சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்!

2 weeks ago

images-16.jpg?resize=281%2C179&ssl=1

சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்!

கடற்றொளில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திருகோணமலை மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.

அந்தவகையில் திருகோணமலை மாவட்ட மட்டங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட அவர் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

விசேடமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் போரில் இந்தியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் குறித்து விசேட கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை உபயோகிப்பதன் ஊடாக எங்களது மீனவர்கள எமது கடல் வளங்களை நாசப்படுத்துகின்றனர். ஆகையால் சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது என்றும் அவ்வாறு எவரும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கத்தின் ஊடாக மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1426716

அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது – நாமல்

2 weeks ago

New-Project-376.jpg?resize=750%2C375&ssl

அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது – நாமல்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, ஷிராணி பண்டாரநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், 2013 ஜனவரியில் அவர் தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அந்த நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருந்ததாகக் கூறினார்.

“தற்போதைய அரசாங்கம் நாம் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அவர்கள் அதை மீண்டும் செய்தால், அது சரியல்ல. இதுபோன்ற முடிவுகளுக்கான விலையை எங்கள் கட்சி இன்னும் செலுத்தி வருகிறது,” என்றும் அவர் கூறினார்.

அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தனிநபரை குறிவைக்க நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், தனது கட்சி அதை ஆதரிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1426709

தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையால் முதலாவது மாதிரி உணவகம் நாரஹேன்பிட்டியில் திறப்பு!

2 weeks ago

pr.jpg?resize=750%2C375&ssl=1

தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையால் முதலாவது மாதிரி உணவகம் நாரஹேன்பிட்டியில் திறப்பு!

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது

தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் 1ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், உணவு தரப்படுத்தல் மற்றும் தரம் தொடர்பில் நாட்டில் காணப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்துதல், நுகர்வோருக்கு சத்தான மற்றும் போசாக்கான மற்றும் சுகாதார பாதுகாப்பு மிக்க உணவை வழங்குதல் குறித்த வர்த்தக சமூகத்தின் அணுகுமுறை மாற்றத்தை உருவாக்க “Clean Srilanka” திட்டத்தின் மூலம் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1426729

மீனவர்களின் நலன்கருதி முல்லையில் வெளிச்சவீடு அமைக்கப்படவேண்டும் ; ரவிகரன் எம்.பி

2 weeks ago

மீனவர்களின் நலன்கருதி முல்லையில் வெளிச்சவீடு அமைக்கப்படவேண்டும் ; ரவிகரன் எம்.பி

28 Mar, 2025 | 10:58 AM

image

முல்லைத்தீவில் வெளிச்சவீடு இன்மையால் கடலுக்குச்செல்லும் மீனவர்கள் கரைதிரும்புவதில் பாரிய இடர்பாடுகளை நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்றனர்.    

எனவே மீனவர்களின் நலன்கருதி முல்லைத்தீவு கடற்கரையில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது.   

குறித்த தீர்மானம் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதுடன், இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் அனுப்பிவைப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

முன்பு முல்லைத்தீவு - மணற்குடியிருப்புப் பகுதியில் வெளிச்சவீடொன்று இருந்தது. அது தற்போது முற்று முழுதாக அழிவடைந்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கொக்கிளாயிலிருந்து பேப்பாரப்பிட்டிவரை சுமார் 74 கிலோமீற்றர் வரையிலான கடற்கரையோரத்தில் அதிகளவான மீன்பிடித் துறைகளிலிருந்து, மீனவர்கள் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேரந்த மீனவர்கள், முன்பு வெளிச்சவீட்டின் உதவியுடன் இடர்பாடுகளின்றி கடலுக்குச்சென்று தமது துறைகளில் கரையேறுவார்கள். 

தற்போது வெளிச்சவீடு முற்றாக அழிவடைந்துள்ளதால் மீனவர்கள், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் கரையேறுவதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். 

கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றில், கடற்றொழில் அமைச்சருடனும் பேசியுள்ளேன். அவரும் வெளிச்சவீட்டினை அமைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார். 

எனவே இந்த மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், ஏற்கனவே முன்பிருந்த இடத்தில் வெளிச்சவீட்டை அமைப்பதென ஒரு தீர்மானத்தை எடுப்பதுடன், அந்தத்தீர்மானத்தை கடற்றொழில் மைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் நடவடிக்கைக்காக் அனுப்பிவைப்பதென்ற ஒரு தீர்மானத்தையும் எடுப்போம்  என்றார்.  

இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குறித்த தீர்மானத்தை கடற்றொழில் அமைச்சர் உள்ளிட்ட உரிய தரப்பினருக்கு அனுப்பிவைப்பதென்ற முடிவும் எடுக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/210418

”கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” - சுமந்திரன்

2 weeks ago

”கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” - சுமந்திரன்

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது பிற்போடப்பட்ட தேர்தல். முன்னர் நடந்திருக்க வேண்டிய தேர்தல். காலம் தாழ்த்தி தற்போது நடைபெறுகிறது. இந்த தேர்தல் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால் அப்பொழுது நாட்டில் இருந்த சூழ்நிலை சற்று வித்தியாசமானதாக இருந்திருக்க கூடும். ஆனால் தற்போது இந்த தேர்தல் நடைபெறும் சூழ் நிலையில் எங்களுக்கான சவால்கள் அதிகமாக இருக்கின்றன.

புதிய சவால்களை எப்படி எதிர் நோக்குவது என்று யோசித்து செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம். மக்கள் மத்தியில் பாரம்பரிய கட்சிகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கு உருவாகி இருக்கிறது. பொதுவாக இந்த நாட்டை குட்டிச் சுவர்களாகியது நீண்டகாலம் இருந்த கட்சிகள் என அங்கலாய்த்து, அடிப்படையான மாற்றம் தேவை என்று தான் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் நிலையில் முன் எப்போதும் இல்லாத மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒரு எதிர்பார்ப்போடு இந்த மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். எவரிடமும் நம்பிக்கை வைத்து கொண்டு வந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்பு இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்தமையால் தான் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக தங்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. தமது உடனடித் தேவைகளை தீர்க்கின்ற அளவில் செயற்படுகின்றோமா என்பது பற்றி மக்கள் மத்தியில் ஒரு கேள்வி இருக்கிறது.

நாங்கள் எமது இனத்தின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதை நாங்கள் செய்கின்றோம். அதை நாங்கள் சொல்கின்றோம். ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளில் வந்து சேர வேண்டும். தமிழ் மக்களின் கைகளில் வர வேண்டும் என 75 வருடமாக உழைக்கின்ற, முயற்சி செய்கின்ற ஒரு கட்சி. அதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை.

அதை செய்கின்ற அதேவேளை, மக்களுக்கு நாளாந்த பிரச்சனைகள் பல உள்ளன. உள்ளுராட்சி மன்றங்களிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நாளாந்த பிரச்சனைகளை சந்திக்கக் கூடியதான அதிகாரங்கள். ஆகையினால், தான் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை அறிந்து அதை நாம் செயற்படுத்துகின்ற போது, மக்களுடைய நாளாந்த பிரச்சனைகளை தீர்க்கின்ற வகையில், அதிகாரங்கள் எமது கைகளில் வருகின்ற போது அதை திறம்பட செயலாற்றுபவர்கள் நாங்கள் என்பதை மக்களுக்கு காண்பிக்க முடியும். அதை இவர்கள் செய்வார்களா இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது.

ஏனெனில், எமது வாய்களில் இருந்து வருகின்ற வார்த்தைகள் எல்லாம் எமது விடுதலை பற்றியதும், அதிகார பகிர்வு பற்றியதும், தேசத்தின் விடுவிப்பு பற்றியதாகவும் தான் இருக்கிறது. அது தவறில்லை. அதற்காகத் தான் நாங்கள் இருக்கின்றோம்.

அதற்காக பேசுகின்ற, அதேவேளை அடிமட்டத்தில் மக்களது நாளாந்த பிரச்சனைகள் சம்மந்தமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு கொடுத்திருக்கின்ற அதிகாரங்களையும் நாம் பிரயோகிக்க வல்லவர்கள் என்பதையும் காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த அதிகாரங்களை கையாள தெரியாதவர்கள என்று மக்கள் நினைத்தால் அரசியல் அதிகாரங்களை கோருவது தேவையற்றது எனவும், சரியாக கையாண்டால் இவர்களிடம் கொடுப்பது நல்ல விடயம் எனவும் கருதுவார்கள். உள்ளூராட்சி சபைக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. அதை கேட்டுப் பெற வேண்டியதில்லை. மாகாண சபைக்கு அதிகாரங்களை கேட்டு பெற வேண்டும். சமஸ்டிக்காக உழைக்கின்றோம்.

மாற்றத்தினால் மக்களது வாழ்க்கையில் எதுவித மாற்றமும் நிகழப் போவதில்லை என்கின்ற சந்தேகம் தற்போது மக்களிடம் வந்துள்ளது. 6 மாத காலத்திற்குள் வந்துள்ளது. அந்த நம்பிக்கை வீண் போகின்ற வகையில் இந்த ஆட்சி செல்கின்ற திசையை பார்த்து மக்களது மனதில் உதித்துள்ளது.

பொறுப்பு கூறல் சம்மந்தமாக பல சர்வதேச தலைவர்களுடன் பேசி, பல விதமான பொறிமுறைகள் ஊடாக அழுத்தங்களை நாம் கொடுத்திருக்கின்ற போது, தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் அந்தக் காலத்தில் பேசாமல் இருந்தார்கள்.

2016, 2017 ஆம் ஆண்டுகளில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்க பாராளுமன்றத்தில் நாம் செயற்பட்ட போது எங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள். அது குறித்து பேசினார்கள். நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களை விட கூடுதலாக சொன்னார்கள். அந்த நிலைமைகள் 6 மாத காலத்திற்குள் தலைகீழாக மாறி விட்டது. எதிர்கட்சியில் இருந்ததைப் போல் அவர்கள் இப்போது இல்லை.

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும்.

இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும். தமிழ் மக்களது ஆணை வந்து விட்டது. தீர்வு நாங்கள் கொடுப்பது தான் என அவர்கள் சொல்ல தலைப்படுவதை முளையில் கிள்ளி எறிய வேண்டும்.

கிழக்கில் மட்டக்களப்பை தவிர, நிலைமை மோசமாக உள்ளது. வடக்கில் இருந்து வரும் செய்தி மிக முக்கியமான செய்தியாக இருக்க வேண்டும்.

மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் முக்கியமானவை. அதன் சொல்லிலேயே ஒரு அடையாளம் இருக்கிறது. அது எமது கைகளில் இருக்க வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

https://www.samakalam.com/கொக்கரிக்கின்ற-ஆட்சியாள/

வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது; சுரேஷ் பகிரங்க வேண்டுகோள்

2 weeks ago

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைக்கக் கூடாது என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகப் பார்க்கப்படுகின்றது. அத்தகைய முக்கியத்தும் உள்ள இந்தத் தேர்தலை வெறுமனே உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனக் குறைத்து மதிப்பிட கூடாது.

இந்தச் சபைகள் அனைத்தையும் கைப்பற்ற ஆளுங்கட்சியினர் முழு வேலையையும் செய்வார்கள். ஏனெனில், அவர்கள் வசம் நிதிப் பலம், ஆட் பலம், முப்படைப் பலம் என சகலதையும் பயன்படுத்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் செய்வார்கள்.

இதற்கு மேலாக வேட்பாளர்கள் மட்டுமல்லாது கட்சிகளுக்கு எதிராகவும் இல்லாத பொல்லாத பல பிரச்சாரங்களை அவர்கள் செய்யக் கூடும். ஆகையினால் இவற்றையெல்லாம் உணர்ந்தவர்களாக முழு வீச்சுடன் உங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் சில சபைகளில் எங்களது வேட்புமனுக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு எதிராக நாங்கள் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறோம். இன்னும் சில தினங்களில் சாதகமான தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறான தீர்ப்பு வந்த பின்னர் சகல இடங்களிலும் நாம் எமது பிரச்சார நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். இதனூடாக எங்களது சங்கு கூட்டணியைப் பலப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதில் தவறிழைக்கக் கூடாது.

குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என்று ஒரு பகுதியினர் விரும்பி வாக்களித்தனர். அதனூடாக முகம் தெரியாத மூன்று பேரைக் கொண்டு வந்தார்கள். அவர்களை நாடாளுமன்றமும் அனுப்பி வைத்தார்கள்.

அவ்வாறு திசைகாட்டியில் வென்ற மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை யாராவது பார்த்து இருக்கிறீர்களா என்றால் இல்லை. இப்படி முகம் தெரியாதவர்களையே வாக்களித்து அனுப்பியிருக்கின்ற நிலையில் தங்களுக்கு மக்கள் ஆதரவு பலம் இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

அப்படியான மனோநிலையில் மக்கள் இல்லை என்பதை அவர்களுக்கு இந்தத் தேர்தலின் ஊடாகத் தெரியப்படுத்த வேண்டும்.

அப்படியாக இந்த அரச தரப்பினர் மீண்டும் ஒரு தடவை வெல்வார்களாக இருந்தால் தமிழ் மக்களின் இத்தனை அழிவுகள், போராட்டங்கள், தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போன சூழ்நிலையை ஏற்படுத்தும் நிலைமை ஏற்படலாம்.

ஆகவே, அரச தரப்பில் இருந்து அல்லது சிங்கள தரப்பில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்யக் கூடாது என்பதில் தெளிவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வித்தைகளுக்கு இடமளிக்காது அவர்களுக்கு நல்லதொரு பாடத்தைப் புகட்டும் வகையில் உங்களது செயற்பாடுகள் அமைய வேண்டும்.

இந்த ஆளுந்தரப்பினருக்கு எதிராகவே நீங்கள் முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டியதாக உள்ளது. கடந்த தேர்தல் போன்று இதிலும் தவறிழைத்தால் அது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

இன்றைக்கு அதிக பலத்துடன் ஆளும் தரப்பாக ஜே.வி.பி. உள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அந்தக் கட்சிக்கு வாக்களித்து மீண்டும் வரலாற்றுத் தவறைத் தமிழ் மக்கள் இழைக்கக் கூடாது. ஆகையினால், இந்தச் சிங்கள தேசிய கட்சிகளை விலக்கி வைத்துவிட்டு தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

மேலும் சுயேச்சையாகவும் ஒரு எம்.பி. வந்திருக்கின்றார். அவர் யார் என்பதும் இப்போது அவர் என்ன என்ன செய்து வருகின்றார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையில்தான் இந்த வைத்தியரின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதேவேளை, இந்தத் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது என்றும், தேர்தல் முடிந்த பின்னர் கூட்டுக்களை அமைக்கலாம் என்றவாறாக சுமந்திரன் கூறுவார். ஆனால், சபைகளில் நாங்கள் பெரும்பான்மையை எடுக்க வேண்டும். இதனூடாக கூட்டுச் சேராமலும் ஆட்சியமைக்க முடியும். கூட்டுச் சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்கலாம் என்றில்லை.

அதேநேரத்தில் யாருடன் கூட்டு என்று பலர் கேட்கலாம். உண்மையில் மக்களின் முழுமையான ஆதரவுடன் நாங்கள் வெல்வோமாக இருந்தால் யாருடனும் கூட்டுச் சேர வேண்டிய தேவை கிடையாது.

எனவே, கடந்த தேர்தலில் இழைத்த தவறுகளை மறுபடியும் இழைக்காமல் தமிழ் மக்களின் போராட்டங்களும், தியாகங்களும் வீண்போகாத வகையில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/316619

யாழில் மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது

2 weeks ago

Published By: DIGITAL DESK 2 28 MAR, 2025 | 10:58 AM

image

பாடசாலை மாணவி ஒருவரை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 05 கற்கும் மாணவிக்கே அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

தரம் - 05 இல் கற்கும் மாணவர்களுக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை பாடசாலையில் , ஆசிரியரால் பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. 

பரீட்சையின் பின்னர், வினாத்தாளை மாணவர்களிடையே பரிமாறி , அதனை மாணவர்களையே திருத்துமாறு ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். 

அதனை அடுத்து மாணவர்கள் தமக்குள் வினாத்தாளை பரிமாறி திருத்தும் போது, அடிவாங்கியதாக கூறப்படும் மாணவி , தனது வினாத்தாளை திருத்திய மாணவிக்கு ,  பிழையான விடைகளை சரியாக எழுதி திருத்துமாறு கூறியுள்ளார். அந்த மாணவியும் அதனை செய்துள்ளார். 

இதனை அவதானித்த ஆசிரியர் இரு மாணவிகளையும் அழைத்து , கடுமையாக எச்சரித்து , மாணவிகளை தடியால் அடித்து , தண்டனை வழங்கியுள்ளார். 

அதில் விடைகளை சரியாக எழுத கூறிய மாணவி வீட்டிற்கு சென்று ஆசிரியர் அடித்த விடயத்தை கூறிய போது, மாணவியின் தாயார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது , மாணவி சிகிச்சை பெறும் அளவுக்கு எதுவும் இல்லை என வைத்தியசாலையில் இருந்து மாணவியை அனுப்பியுள்ளனர்.

அதன் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாணவியின் தாயார் ஆசிரியருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் ஆசிரியரை விசாரணைக்கு அழைத்து விசாரணைகளின் பின்னர் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு , ஆசிரியருக்கு ஆதரவாக பாடசலையின் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பொலிஸ் நிலையம் முன்பு கூடியிருந்த நிலையில் , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஆசிரியரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளோம். நீதிமன்றில் வந்து பார்க்குமாறு அறிவுறுத்திய பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

https://www.virakesari.lk/article/210417

இலங்கை இராணுவத்துக்கொரு நீதி? இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா? - ராஜித கேள்வி

2 weeks ago

Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 05:38 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு  பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார்.

களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதென்றால், காசாவிலுள்ள அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பது மனித உரிமை இல்லையா என்று பிரித்தானிவிடம் கேட்கின்றேன். இஸ்ரேல் படை வீரர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

காசாவில் சுமார் 50 000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்துக்காக பிரித்தானியா ஒரு பில்லியனுக்கும் அதிக உதவிகளை வழங்கியிருக்கிறது.

தமது நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு நிவாரணத்தை வழங்காது இஸ்ரேல் இராணுவத்துக்கு உதவிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவே இவ்வாறு எமது படையினருக்கு எதிராக தடை விதித்துள்ளது.

சிறுவர்களையும் பெண்களையும் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக விதிக்கப்படாத தடை எதற்காக இலங்கை இராணுவத்துக்கு மாத்திரம் விதிக்கப்பட வேண்டும்? பக்க சார்பாக செயற்படும் பிரித்தானிவின் செயற்பாட்டை கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்றார். 

https://www.virakesari.lk/article/210364

50 ஆயிரம் பேருக்கு டைபாய்டு தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு

2 weeks ago

50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசி - தொற்றுநோயியல் பிரிவு அறிவிப்பு

Published By: DIGITAL DESK 2 27 MAR, 2025 | 07:18 PM

image

(செ.சுபதர்ஷனி) 

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி நாட்டில் உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தைரொய்ட் தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் திலங்க ருவான் பத்திரன தெரிவித்தார்.

தைராய்டு விசேட தடுப்பூசி திட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சால் வியாழக்கிழமை (27) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு  தைராய்டு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ்  தொற்றுநோயியல் பிரிவு செயல்படுத்தியுள்ளது. அதற்கமைய தற்போது நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மேற்படி தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த டைபாய்டு காய்ச்சல் பரவல் மற்றும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட தரவுகளுக்கமைய, முன்னுரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் டைபாய்டு தொற்று பரவல் சமூகத்தில் அதிகரிப்பதற்கு உணவுப்பொருள் தயாரிப்பு முறை மற்றும் விற்பனை ஆகிய பிரதான காரணங்களாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால் இத்துறையில் பணிபுரிபவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதன் மூலம் தைராய்டு  தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடிவதுடன் ஏனையோருக்கு நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்படுகிறது. முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அனைத்து பிரதேசங்களிலும் தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள 358 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளுக்கமைய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நடமாடும் உணவு விற்பனையாளர்கள், உணவக ஊழியர்கள், சன நெரிசலான இடங்களில் உள்ள உணவுப்பொருள் விற்பனையாளர்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குழுக்களாக உணவு தயாரித்தல், விற்பனை, விநியோகம்  ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

தைராய்டு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம். சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச தடுப்பூசி திட்டம் பற்றிய மேலதிக தகவல்களை, தொற்றுநோயியல் பிரிவு மற்றும் நாடு முழுவதும் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களில் பெறலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/210374

Checked
Fri, 04/11/2025 - 09:46
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr